மீரிகம-கினடேனிய பிரதேசத்தில் புதுப்பிக்கப்பட்ட செயிண்ட் ஸ்டீபன்ஸ் தேவாலயம் மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்த புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும், இது சர்வதேச அமைப்புகளின் தாக்கத்தின் கீழ் வடிவமைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“புதிய பாடத்திட்டம் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கே பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இது உண்மையில் கல்வியா? இவ்வகையான விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லுவது பெற்றோரின் கடமை அல்லவா?”
கார்டினல் ரஞ்சித் மேலும் கூறியதாவது, இத்திட்டத்தில் ஒரே பாலின உறவுகள் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு குறித்து பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், இது ஐக்கிய நாடுகள் மக்கள் நிதி அமைப்பு (UNFPA) உள்ளிட்ட வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
“அவர்கள் அரசுக்கும் கல்வி அமைச்சுக்கும் பணம் கொடுத்துள்ளனர், புத்தகங்கள் அச்சிட்டு வழங்கியுள்ளனர், இப்போது எங்கள் குழந்தைகளை தவறாக வழிநடத்தும் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்,” என அவர் கூறினார்.
அவர் எச்சரித்ததாவது, இத்திட்டம் ஜனவரி 27ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது நாட்டின் பண்பாட்டு மற்றும் ஒழுக்க நெறிகளை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
“இது எங்கள் குழந்தைகளை அழிக்கும் முயற்சி. மதமும் ஒழுக்கமும் இழந்த மேற்கு உலகின் அழிந்த மதிப்புகளை எங்கள் நாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்,” என கார்டினல் ரஞ்சித் வலியுறுத்தினார்.
அத்துடன், அவர் அரசாங்கத்தை இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதோடு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களிடம் கல்வி அமைச்சு அதிகாரிகளை இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
“கல்வி அமைச்சு நிரபராதமான குழந்தைகளை தவறான வழியில் இட்டுச் செல்லும் வகையில் செயல்பட்டால், அதை முழுமையாக நிராகரிக்க வேண்டும்,” என அவர் கூறினார்.




























