கல்வி, நிர்வாகம் மற்றும் உதவிப் பணியாளர்கள் தொடர்பான அனுமதிகள் திடீரெனவும், முன் எச்சரிக்கையின்றியும் புதுப்பிக்கப்படவில்லை என்று பள்ளிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தனை ஊழியர்கள் இல்லாததால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். நிர்வாகச் செயல்பாடுகளும் தடைப்படும். மாணவர்களின் சுகாதாரம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் பள்ளி தொடக்க ஏற்பாடுகளையும் வழக்கம்போல் மேற்கொள்ள முடியாது என அவை தெரிவித்தன.
ஜெருசலேம் கிறிஸ்தவ பள்ளிகள் அனுமதி கோரிக்கை
சம்பந்தப்பட்ட தரப்புகள், பெற்றோர் பிரதிநிதிகள் மற்றும் ஜெருசலேம் பள்ளிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேவையான நுழைவு அனுமதிகள் மீண்டும் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் வரை வகுப்புகள் நடைபெறாது என்று பள்ளிகள் அறிவித்தன.
மாணவர்களின் கல்வி உரிமைக்கு தாங்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக பள்ளிகள் கூறின. எனினும், தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கிறிஸ்தவ பள்ளிகளின் நிலைத்தன்மையை பாதிப்பதாகவும், மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு சேவை செய்யும் திறனை குறைப்பதாகவும் அவை எச்சரித்தன.
பெத்லகேமில் உள்ள எவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்துமஸ் தேவாலயத்தின் போதகர் முன்தர் ஐசக்கும் இந்த நடவடிக்கையை கண்டித்தார். ஜெருசலேமில் கிறிஸ்தவ இருப்புக்கு எதிரான இஸ்ரேலின் அழுத்தம் தொடர்வதாக அவர் கூறினார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து வரும் ஆசிரியர்களுக்கான அனுமதிகள் மறுக்கப்பட்டதால் கிறிஸ்தவ பள்ளிகள் வகுப்புகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
காசா போர் தொடங்கிய அக்டோபர் 2023 முதல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைச் சேர்ந்த பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கான நுழைவு அனுமதிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகளில் ஆசிரியர்களும் அடங்குகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விரைவில் பள்ளிகளுக்குத் திரும்பும் வகையில் அனுமதி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று பள்ளிகள் வலியுறுத்தின. கல்வியாண்டு வழக்கமான முறையில் தொடங்க வேண்டும் என்பதே அவற்றின் கோரிக்கையாகும்.






























