குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பிச்சை எடுக்கும் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் சேவை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மார்க்கெட்டுகள் மற்றும் பள்ளிவாசல்களின் அருகே சிலர் ரமலானின் ஆன்மீக சூழலை பயன்படுத்தி பிச்சை எடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிச்சை எடுக்கும் நபர்களையும் அதன்மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிய சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக குடும்ப விசா அல்லது விஜிட் விசாவில் இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை நாடுகடத்தும் (deportation) நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய செயல்களுக்கு உதவுபவர்களும் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக 112 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடி பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரமலான் மாதத்தில் பகல் நேரங்களில் பொதுவிடங்களில் உணவு உண்ணுதல், குடித்தல் அல்லது நோன்பு விதிகளை மீறுதல் போன்ற செயல்களுக்கு ஒரு மாதம் வரை சிறை தண்டனை அல்லது 100 குவைத் தினார் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரமலான் காலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், முக்கிய சாலைகள் மற்றும் வர்த்தக பகுதிகளில் கூடுதல் காவல்துறை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பும், சமூக ஒழுங்கும் உறுதி செய்யப்படுகின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading