ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மொராக்கோவிலிருந்து சியூட்டாவுக்குள் 70,000-க்கும் மேற்பட்டோர் கடந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், 2,000 முதல் 5,000 பேர் வரை இன்னும் சியூட்டாவில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நெருக்கடியுடன் தொடர்புடைய உயிரிழப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 91 ஆகும். இதில் ஸ்பெயினில் 80 பேரும், மொராக்கோவில் 11 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், மொராக்கோ மனித உரிமைகள் சங்கம் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 141 ஆக இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்யும் பணி
கடலில் இருந்து மீட்கப்பட்ட பல உடல்களை அடையாளம் காண்பதில் ஸ்பெயின் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சியூட்டாவில் உள்ள சிடி ம்பாரெக் முஸ்லிம் கல்லறையின் நிர்வாகி சயீத் முகமது முகமது கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் வியாழக்கிழமை உடல்களை அடக்கம் செய்யத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
80-க்கும் மேற்பட்ட உடல்களை ஒரே நாளில் அடக்கம் செய்ய வளங்கள் போதவில்லை என அவர் தெரிவித்தார். அடையாளம் தெரியாமல் அடக்கம் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு உடலுக்கும் நீதிமன்றப் பதிவுடன் எண் வழங்கப்படும். பின்னர் குடும்பத்தினர் தகவல் அளித்தால், அந்த எண்ணின் அடிப்படையில் அடையாளத்தை உறுதிசெய்து உடலை ஒப்படைக்க முடியும் என அவர் கூறினார்.
காணாமல் போனவர்களை அடையாளம் காணும் முயற்சி
சியூட்டாவில் காணாமல் போனவர்களைப் பற்றிய புகார்களைப் பெற ஸ்பெயின் அதிகாரிகள் சிறப்பு அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளனர். குடும்பங்களிடமிருந்து புகைப்படங்கள், தனித்த அடையாளக் குறிகள், உடைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகளும் பெறப்பட்டு, அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏவுடன் ஒப்பிடப்படுகிறது.
அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து 32 காணாமல் போனோர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 29 வழக்குகள் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட டிஎன்ஏ தகவல்களுடன் பொருந்தியதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகஸ்ட் 5 அன்று இந்த முறையின் மூலம் முதல் உடல் அடையாளம் காணப்பட்டது.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் புகைப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டு குடும்பங்கள் தேடலைத் தொடர்கின்றன. ரஹாலி என்பவர் தனது மகன் ஜகரியாவைத் தேடி மருத்துவமனைகள் மற்றும் அதிகாரிகளை அணுகியும் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார். இதேபோல், 32 வயதான மெஹ்தி கடலில் இருந்து வெளியேறும் காணொளி கிடைத்தபோதும், 18 நாட்களாக அவரைப் பற்றி செய்தி இல்லை என அவரது சகோதரி ஜைனப் கூறினார்.




























