இலங்கைப் பயணிகளுக்கான புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து விசா விண்ணப்பங்களும் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மின்னணு விசா முறையின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
கொழும்பிலுள்ள ராயல் தாய் தூதரகம் நேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களையும், காகித வடிவிலான விண்ணப்பங்களையும் ஏற்காது எனத் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் ஆன்லைன் முறையையே பயன்படுத்த வேண்டும்.
தாய்லாந்து விசா விதிமுறை: விண்ணப்ப பரிசீலனை காலம்
சுற்றுலா விசாவுக்கான விண்ணப்பங்கள், தேவையான அனைத்து ஆவணங்களும் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 3 முதல் 7 வேலை நாட்களில் பரிசீலிக்கப்படும். ஆவணங்கள் குறைவாக இருந்தால் இந்தக் காலக்கெடு பொருந்தாது.
Non-Immigrant Visa மற்றும் DTV எனப்படும் Destination Thailand Visa விண்ணப்பங்களுக்கு அதிக காலம் தேவைப்படலாம். இலங்கை அல்லது மாலத்தீவில் வசிக்கும் வெளிநாட்டினர் செல்லுபடியாகும் வேலை அல்லது குடியிருப்பு அனுமதி வைத்திருந்தாலும், அவர்களின் விண்ணப்பங்களுக்கு கூடுதல் பரிசீலனை நேரம் தேவைப்படலாம்.
தேவைப்பட்டால், கூடுதல் ஆவணங்கள் அல்லது தகவல்களை சமர்ப்பிக்குமாறு தூதரகம் விண்ணப்பதாரர்களிடம் கேட்கலாம். சில விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விசா நேர்காணலுக்கும் அழைக்கப்படலாம். இந்த நடவடிக்கை ஒவ்வொரு வழக்கையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்.
செப்டம்பர் 15க்கு பிறகு தாய்லாந்து செல்லத் திட்டமிடும் இலங்கைப் பயணிகள், பயணத் தேதிக்கு முன்பே விண்ணப்ப செயல்முறையைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். சமீபத்திய தேவைகள், நடைமுறைகள் மற்றும் மாற்றங்களை அறிய அதிகாரப்பூர்வ தகவல் வழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
































