இங்கிலாந்தில் பள்ளி மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கில் அதிக சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை பள்ளி உணவுப் பட்டியலிலிருந்து நீக்க UK Government முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் பள்ளிகளில் வழங்கப்படும் இனிப்புகள் மற்றும் உணவுகள் கடுமையாக கட்டுப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக அதிக எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள இனிப்புகள் இனி வழங்கப்படமாட்டாது. மேலும் இனிப்புகள் வழங்கப்பட்டாலும் அவற்றில் குறைந்தது 50% பழங்கள் இருக்க வேண்டும் என்ற விதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த மாற்றம் குழந்தைகளில் அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் பல் நோய்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு இரட்டிப்பு சர்க்கரையை உட்கொள்கிறார்கள் என்றும் இது நீண்டகால உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் 2027 முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை உருவாக்கி, எதிர்காலத்தில் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவது அரசின் முக்கிய நோக்கமாகும்.

































