செவ்வாய்க்கிழமை காலை லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட முயன்ற UPS நிறுவனத்தின் MD-11F வகை சரக்கு விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அருகிலிருந்த வணிக நிறுவனங்களுடன் மோதி மாபெரும் தீப்பரவலுக்கு காரணமானது.
விபத்தில் பல கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்ததுடன், விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
UPS நிறுவனம் தெரிவித்ததாவது, MD-11 மாடல் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தும் முடிவு, உற்பத்தியாளர் போயிங் நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளது. இதனையடுத்து, FedEx நிறுவனமும் அதே நடவடிக்கையை மேற்கொண்டது.
விபத்தின் காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றும், தேசிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பல மணி நேரங்கள் கழித்து, 14வது உடலும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் தீப்பரவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் உயிரிழந்தோர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கூறப்பட்டது.
“இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் யாரும் காணாமல் போகவில்லை என நம்புகிறோம்,” என லூயிஸ்வில் மேயர் கிரேக் கிரீன்பெர்க் தெரிவித்தார்.
UPS நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்களது மொத்த விமானப் படையின் சுமார் 9% நிறுத்தப்பட்டதாகவும், இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் கூறியுள்ளது.
போயிங் நிறுவனம் ராய்ட்டர்ஸுக்கு அனுப்பிய அறிக்கையில்,
“UPS மற்றும் FedEx நிறுவனங்கள் பயன்படுத்தும் MD-11 மாடல் விமானங்களின் பறப்பை தற்காலிகமாக நிறுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகும்,” என தெரிவித்துள்ளது.
தற்போது UPS மற்றும் FedEx ஆகியவை உலகின் மிகப்பெரிய சரக்கு விமான சேவையாளர்களாகும். FedEx நிறுவனம் 28 MD-11 விமானங்களை, UPS நிறுவனம் 27 விமானங்களை கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
விபத்தில் ஈடுபட்ட MD-11F மூன்று இயந்திரங்கள் கொண்ட விமானம் முதலில் 34 ஆண்டுகளுக்கு முன்பு தாய் ஏர்வேஸ் நிறுவனத்தால் பயணிகள் விமானமாக இயக்கப்பட்டது; பின்னர் 2006ஆம் ஆண்டு UPSக்கு மாற்றப்பட்டது.
விசாரணை அறிக்கைகளின்படி, புறப்படும் தருணத்தில் இடது புற இயந்திரம் தீப்பற்றி சிறகிலிருந்து பிரிந்து விழுந்தது, மேலும் விமானம் சுமார் 38,000 கேலன் (144,000 லிட்டர்) எரிபொருள் ஏற்றிச் சென்றதால் தீ பரவல் மிகுந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























