இதன்படி, ஒரு நிறுவனம் இரண்டு முக்கிய சூழ்நிலைகளில் மட்டுமே ஒருவரை வணிக நோக்கில் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும். ஏற்கனவே அந்த நிறுவனத்துடன் வாடிக்கையாளருக்கு ஒப்பந்தம் இருந்து, அந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய கூடுதல் சேவை அல்லது மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குவது முதலாவது சூழ்நிலையாகும். இரண்டாவது, வணிக அழைப்புகளைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் முன்கூட்டியே தெளிவான ஒப்புதலை வழங்கியிருக்க வேண்டும்.
வாடிக்கையாளரின் ஒப்புதல் சுதந்திரமாகவும், தெளிவான தகவல்களின் அடிப்படையிலும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த ஒப்புதலின் காலம் அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே இருக்க முடியும். மேலும் அது தானாகப் புதுப்பிக்கப்படக்கூடாது. வழங்கிய ஒப்புதலை வாடிக்கையாளர் எந்த நேரத்திலும் திரும்பப் பெறவும் முடியும்.
அனுமதிக்கப்பட்ட வணிக அழைப்புகளுக்கும் நேரக் கட்டுப்பாடு தொடர்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் மட்டுமே இத்தகைய அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வணிக அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
புதிய விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி வணிக அழைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்றும் பிரான்ஸ் அரசின் Service Public தெரிவித்துள்ளது. விதிமீறலான அழைப்புகள் தொடர்பாக பொதுமக்கள் SignalConso மூலம் புகார் அளிக்க முடியும்.
மேலும், வணிக அழைப்புகளைத் தடுப்பதற்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட Bloctel சேவை, புதிய பொதுத் தடை நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து 2026 ஆகஸ்ட் 11 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. செய்தித்தாள், பருவ இதழ் மற்றும் சஞ்சிகை சந்தாக்களை விற்பனை செய்வது தொடர்பான அழைப்புகளுக்கு இந்த பொதுத் தடையில் விதிவிலக்கு உள்ளது.
































