அவரது தோழி ரேவதி கமல், ஜமீமா பேகத்தின் புகைப்படத்துடன் இரங்கல் போஸ்டரை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், ஜமீமா பேகம் உயிரிழந்ததாகவும், இறுதி நிகழ்வுகள் ஆகஸ்ட் 31, 2026 அன்று நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அறிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் ஜமீமா பேகம் மரணம்: விபத்து குறித்து தகவல்
கிடைத்த தகவலின்படி, ஜமீமா பேகம் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியான பிறகு, விபத்து குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
‘நீயா நானா’ நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான விவாதத்தில் அவர் தனது தம்பியுடன் கலந்து கொண்டார். பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பதைவிட, பெண்களை மதிக்கும் விதத்தில் ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார். இளம் தலைமுறை முன்னேற்றமாகவும் பொறுப்புடனும் செயல்படுகிறது என்ற கருத்தையும் அவர் நிகழ்ச்சியில் முன்வைத்தார். அந்த விவாதத்தில் பாலியல் கல்வி குறித்த அவரது உரையாடலும் அப்போது கவனம் பெற்றது.
ஜமீமா பேகம் பெண்கள் கல்வி, சமத்துவம், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அவரை 1.71 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அவர் கடைசியாக ஆகஸ்ட் 6ஆம் தேதி இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். கருப்பு உடை மற்றும் நீல நிறத் துப்பட்டா அணிந்து கடற்கரையில் அமர்ந்திருந்த அந்தப் புகைப்படங்களுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எமோஜிகளை மட்டும் பதிவிட்டிருந்தார். தற்போது அந்தப் பதிவும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.


































