ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு மேலும் பல அமெரிக்க வான்வழி எரிபொருள் நிரப்பும் (Aerial Refuelling) விமானங்கள் விரைவில் வந்து சேரவுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பரம் மேற்கொண்ட தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பிராந்தியத்தில் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் மீண்டும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் மத்திய கிழக்கில் தனது இராணுவ நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் விமானங்களுடன் சேர்த்து மேலும் டசின் கணக்கான விமானங்கள் அனுப்பப்படவுள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்விமானங்கள் நீண்ட தூர போர் விமானங்களுக்கு வானில் எரிபொருள் நிரப்பும் திறனை வழங்குவதால் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் என மதிப்பிடப்படுகிறது.
ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து உடனடி கருத்து வெளியிடவில்லை. இருப்பினும் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் சாத்தியக்கூறை முன்னிட்டு கூடுதல் எரிபொருள் நிரப்பும் விமானங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானங்கள் வருகையால் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் சில விமானங்கள் இஸ்ரேலிய விமானப்படை தளங்களில் நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்து வருவதால் சர்வதேச சமூகம் இந்த முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.













Leave a Reply