ஒரு திரைப்படம் உருவாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் தேவைப்படுவது வழக்கம். ஆனால் சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தில் 70-க்கும் மேற்பட்ட பணிகளை தனியாக மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இயக்கம், தயாரிப்பு, கதை, இசை, பாடல் வரிகள், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட பொறுப்புகளை கவனித்துள்ளார்.
ஒன் மேன் படம் உருவான விதம்
இந்தப் படம் கடந்த 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நான்கு நண்பர்களை மையமாகக் கொண்டது கதை. அவர்கள் பல சாதனைகள் செய்த பின்னர் ஒரு விருதைப் பெறச் செல்கின்றனர். அந்தப் பயணத்தில் அவர்கள் ஆய்வகத்துக்குச் செல்லும் சூழல் உருவாகிறது.
அப்போது நாட்டுமக்களை ஆபத்து ஒன்று தாக்குகிறது. அந்த ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கான வழியை நான்கு நண்பர்களும் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். அவர்களில் ஒருவர் மக்களை ஏன் காப்பாற்ற வேண்டும் என எதிர்மறையாக பேசுகிறார். மற்ற மூவர் அவருடன் மோதியபடி மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடலுக்கு அடியில் படமாக்கப்பட்ட காட்சிகள், ரயில் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட திரில்லர் அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. பல தொழில்நுட்பங்களையும் இயக்குநர் தனியாக கையாண்டதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் குறித்து கேட்டபோது, தனது ஐந்து ஆண்டு உழைப்பே பட்ஜெட் என அவர் தெரிவித்திருந்தார்.
படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என சங்ககிரி ராஜ்குமார் முன்பு வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். சேமித்த பணத்தை முழுவதும் படத்தில் செலவிட்டதாகவும், அதில் கால்வாசி கூட திரும்பக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் சென்னையை விட்டு சொந்த ஊருக்குத் திரும்பியதாகவும், மீண்டும் விவசாயம் மற்றும் தெருக்கூத்து பணிகளில் ஈடுபடலாம் என்றும் கூறியிருந்தார்.
தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோதும், சிம்பு அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். எந்தப் பின்னணியும் இல்லாமல் உழைத்த இயக்குநருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






























