போர்ட்ஸ்மவுத் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்
போர்ட்ஸ்மவுத் துறைமுகப் பகுதிக்கு செல்லும் சாலைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் முடக்கியதாக சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் தெரிவிக்கின்றன. பலர் கருப்பு உடை அணிந்திருந்தனர். சிலர் முகங்களை மறைத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும், குடியேற்றவர்களை அழைத்துச் செல்லும் பணியும் பாதிக்கப்பட்டது.
கேடயங்களுடன் வந்த காவல்துறையினர், குடியேற்றவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பேருந்துகள் செல்ல வழிவகுக்கவும் காவல்துறையினர் பணியாற்றினர். இந்தச் சம்பவம், அதற்கு முந்தைய நாளில் டோவர் துறைமுகத்தை குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியதைத் தொடர்ந்து நடந்தது.
போர்ட்ஸ்மவுத் குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்தை அரசு கண்டனம்
பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், போர்ட்ஸ்மவுத்தில் நடந்ததை “மிரட்டும் மற்றும் கொடூரமான நடத்தை” என்று திங்கள்கிழமை கண்டித்தார். ஞாயிற்றுக்கிழமை கரை இறங்கிய குடியேற்றவர்கள், தங்கள் இறங்குமிடத்தை விட்டு வெளியேறியதாக அமைச்சகம் தெரிவித்தது. வழக்கமான நடைமுறையின்படி அவர்களைப் பராமரிப்பு மற்றும் அடுத்தடுத்த செயல்முறைகளுக்காக மாற்றும் பணி நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இதுபோன்ற வருகைகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. குடியேற்றவர்களின் சிறிய படகுகள் பொதுவாக மேலும் கிழக்குப் பகுதியில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கின்றன. அங்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் கரைகளுக்கு இடையிலான தூரம் குறைவாக உள்ளது.
பிரிட்டன் உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 16,513 குடியேற்றவர்கள் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளனர். 2025ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது.




























