குறித்த கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்து, பிரதேச சபையின் உறுப்பினர்கள் பிரதேச செயலகத்தின் வெளியே கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்பதால், சமூக மட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும் அனுமதி தமக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
“திருட்டுத்தனமாக உள்ளே சென்றார்” – எம்.பிக்கு குற்றச்சாட்டு
சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீ பவானந்தராஜா, வேறொரு வாகனத்தின் மூலம் திருட்டுத்தனமாக கூட்ட மண்டபத்திற்குள் சென்றதாக பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமக்கு அந்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐந்து உறுப்பினர்களுடன் ஆரம்பமான கூட்டம்
இந்த பதற்றமான சூழ்நிலையிலும், ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆசன விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை
இதன்போது, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கு மண்டபத்தின் முன்புற வலது பக்கத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் அமர்ந்தால் கூட்டத்தைத் தலைமை தாங்குபவரின் முகம் தெளிவாக தெரியாது எனக் கூறி, ஆசனத்தை மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, பிரதேச செயலருக்கு அருகாமையில் மேடையில் ஆசனம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கு அமர முடியாது என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மேடைக்கு முன்பாக ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
குழப்பத்தின் பின்னர் கூட்டம் தொடர்ச்சி
இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் குழப்பநிலை ஏற்பட்டது. பின்னர், தவிசாளருக்கு மேடைக்கு முன்பாக ஆசனம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
































