புலம்பெயர்ந்தோர் கடத்தல், துருக்கியிலிருந்து பல்கேரியா வழியாக செர்பியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மனிதக் கடத்தல் வலையமைப்பை செர்பிய அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை ஐரோப்பிய சட்ட அமலாக்க அமைப்பான Europol ஒருங்கிணைப்பில் செர்பியா மற்றும் பல்கேரிய அதிகாரிகளின் இணைந்த விசாரணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சந்தேகநபர் ஒருவரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் மேலும் இரண்டு கூட்டாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் படி இந்தக் குழு 2025 முதல் செயற்பட்டு வந்ததாகவும் 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மட்டும் ஏராளமான ஆப்கானிஸ்தான் குடிமக்களை துருக்கியில் இருந்து பல்கேரியா அங்கிருந்து செர்பியா வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்தோர் முதலில் பல்கேரியா மற்றும் செர்பியாவுக்கிடையேயான அதிகாரப்பூர்வமற்ற நில எல்லை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கால்நடையாக GPS வழிகாட்டுதலின் அடிப்படையில் எல்லையை கடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் செர்பியாவில் இருந்த குழுவினர் அவர்களை அழைத்துச் சென்று தற்காலிக தங்குமிடமும் அதன் பின்னர் பெல்கிரேடு மற்றும் ஹங்கேரி எல்லை நோக்கிய போக்குவரத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒவ்வொரு நபரிடமிருந்தும் பெல்கிரேடு வரை கொண்டு செல்ல சுமார் 1,000 யூரோவும் ஹங்கேரி எல்லை நோக்கி கொண்டு செல்ல மேலும் 300 யூரோவும் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் ஹவாலா (Hawala) எனப்படும் முறைசாரா பணமாற்று அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனைகளின் போது மனிதக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று வாகனங்கள் துப்பாக்கிகள் வெடிமருந்துகள் தொடர்பு சாதனங்கள் கைப்பேசிகள் 5,700 யூரோ மற்றும் 40,000 செர்பிய தினார்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply