சுகாதார அமைச்சின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை, உற்பத்தி முதல் நுகர்வு வரையிலான முழு உணவுச் சங்கிலிக்கும் ஆபத்து அடிப்படையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறையை முன்வைக்கிறது. உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்களுக்கும் துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைக்க இது வழிகாட்டும்.
தேசிய உணவு பாதுகாப்புக் கொள்கையின் ஆறு முன்னுரிமைகள்
உணவு பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பு, உணவுச் சங்கிலி முழுவதும் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல், சட்டங்கள் மற்றும் தரநிலைகளை வலுப்படுத்துதல் ஆகியவை முதல் முன்னுரிமைகளாகும்.
மேலும், கண்காணிப்பு, ஆய்வகங்கள் மற்றும் ஆபத்து பகுப்பாய்வை வலுப்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைகளை உருவாக்குதல் ஆகியவையும் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் உணவு பாதுகாப்புக்கான சட்டங்கள் இருந்தபோதும், பல நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்கும் தேசியக் கொள்கை இதுவரை இல்லை. அந்தக் குறையை இந்தக் கொள்கை நிவர்த்தி செய்கிறது. உற்பத்தியாளர்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வையும் இது அதிகரிக்கிறது.
மாறிவரும் உற்பத்தி முறைகள், விரிவடைந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், நுகர்வோர் விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் உருவாகும் புதிய சவால்களையும் கொள்கை கவனத்தில் கொள்கிறது.
சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்கே, இந்தக் கொள்கை பொதுச் சுகாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றம் எனத் தெரிவித்தார். தடுப்பு நடவடிக்கைகள், அறிவியல் சார்ந்த ஆபத்து மேலாண்மை மற்றும் துறைசார் ஒருங்கிணைப்புக்கு இது தெளிவான கட்டமைப்பை வழங்கும் என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலத்தீவு பிரதிநிதித்துவக் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹான் ஹெஸ்ஸே, உணவு பாதுகாப்பு நுகர்வோர் நலத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமானது எனக் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் செயல்படும் BESPA திட்டத்தின் மூலம் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, தேசிய மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிபுணத்துவம், கொள்கை வரைவு மற்றும் பங்குதாரர் ஆலோசனைகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. முன்மொழியப்பட்ட புதுப்பிக்கப்பட்ட உணவுச் சட்டம், தேசிய உணவு பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட அடித்தளமாக அமையும். 2026 ஜூலையில் அதன் சமீபத்திய வரைவு தொடர்பாக தேசிய ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கொள்கை உணவால் ஏற்படும் நோய்களை குறைக்கவும், நுகர்வோர் நம்பிக்கையை உயர்த்தவும், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊட்டச்சத்து விளைவுகள், சுற்றுலா, உணவு இழப்புக் குறைப்பு மற்றும் இலங்கையின் வேளாண் உணவுத் துறையின் போட்டித்திறனுக்கும் இது ஆதரவாக இருக்கும்.






























