ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், இந்த மாதம் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்திர கொள்கை உரையில் காலநிலை நடவடிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மாதங்களுக்கான அரசியல் முன்னுரிமைகளை விளக்கும் முக்கிய உரையாக இது அமையும்.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதே உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மீண்டும் மீண்டும் ஏற்படும் வெப்ப அலைகள் அதற்கான தெளிவான அறிகுறிகள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிகமாகவும் நீண்டதாகவும் தீவிரமாகவும் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சி முன்னுரிமைகள் காலநிலை விவகாரத்தை பின்னுக்குத் தள்ளியதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் விமர்சித்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கான புதிய பசுமை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 2035ஆம் ஆண்டுக்குள் புதிய உள் எரிப்பு இயந்திரக் கார்களின் விற்பனையைத் தடைசெய்யும் திட்டத்தையும் கைவிட முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 200 சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகஸ்டில் வான் டெர் லெயனுக்கு கடிதம் அனுப்பின. 27 நாடுகளைக் கொண்ட ஒன்றியத்தை புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலக்குவதற்கான தெளிவான திட்டங்களை உரையில் வெளியிட வேண்டும் என அவை கோரின.
பிரஸ்ஸல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கருத்தரங்கில் ஸ்வீடன் நாட்டின் காலநிலை விஞ்ஞானி ஜோஹான் ராக்ஸ்ட்ரோம் பங்கேற்க உள்ளார். ஒன்றியத்தின் 27 ஆணையர்களும் இதில் சந்திக்க உள்ளனர்.
வான் டெர் லெயன் காலநிலைத் தாங்குதிறன் மற்றும் பசுமைத் தொழில்களின் பொருளாதார வாய்ப்புகளை முன்னிறுத்தலாம் என ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலநிலைத் தாங்குதிறன் தொடர்பான சட்டம் இந்த ஆண்டுக்குள் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது.
அதேவேளை, லட்சியமான பசுமை ஒப்பந்தச் சட்டங்களை முன்னெடுப்பது கடினமாகியுள்ளது. 2024 ஐரோப்பியத் தேர்தலில் பசுமைக் கட்சிகள் பின்னடைந்தன. மத்திய-வலதுசாரி அணியும் தீவிர வலதுசாரி காலநிலை சந்தேக அணிகளும் நாடாளுமன்றத்தில் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ளன.
கார்பன் சந்தை சீர்திருத்தம், விமானப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து மற்றும் அடுத்த நீண்டகால நிதிநிலைத் திட்டம் குறித்தும் உறுப்புநாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கொள்கையில் உறுதியான நடவடிக்கைகள் தேவை என பசுமைக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.





























