பிரதீப் ஆன்டனி, பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். அவர் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 2026 ஏப்ரலில் குழந்தை பிறந்ததாகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பதற்கு முன்பு, நண்பர்களிடம் குழந்தையை விற்றுவிடலாம் என்று நகைச்சுவையாகப் பேசியதாக அவர் கூறியுள்ளார். குழந்தைக்குப் பொறுப்பான தந்தையாக இருக்க முடியாது என்று அப்போது நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் குழந்தை பிறந்த பிறகு தனது எண்ணங்கள் முழுவதும் மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தை தன்னை மகிழ்ச்சியாகப் பார்த்த தருணங்கள், தினமும் புதிய உணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
தற்போது அந்தக் குழந்தை தன்னுடன் இல்லை என்றும், ஒரு மாதமாகக் குழந்தையைப் பார்க்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு அந்த உறவை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.
பிரதீப் ஆன்டனி திருமண வாழ்க்கை குறித்து வெளியான பதிவு
தனக்கு எப்போதும் ஒரு குடும்பம் வேண்டும் என்றும், நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என்றும் ஆசை இருந்ததாக பிரதீப் ஆன்டனி தெரிவித்துள்ளார். தான் வளர்ந்த சூழலுக்கு மாறான வாழ்க்கையை குழந்தைக்கு வழங்க விரும்பியதாகவும் கூறியுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்தது போல உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் தினமும் மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது முந்தைய உறவு தன்னை பலவீனப்படுத்தியதாகவும், அந்த நேரத்தில் கிடைத்த அன்பைப் பற்றிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த உறவுக்காக அதிக விலை கொடுத்ததாகவும் பதிவில் தெரிவித்துள்ளார்.
திருமண உறவுக்குள் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்றும், மனைவிக்கும் இனி தன் மீது காதல் இல்லை என்று நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் திருமணத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு பெயர் வைக்கக்கூட தன்னால் முடியவில்லை என்றும் அவர் எழுதியுள்ளார். குழந்தை தற்போது தாயுடன் இருப்பதே நல்லது என நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்ததற்காக பலர் அமைதியாக இருக்கச் சொல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பேசுவதற்கு தன்னிடம் யாரும் இல்லை என்று வேதனை தெரிவித்தார்.
பிரதீப் ஆன்டனி நடிகராக வருவதற்கு முன்பு உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அருவி, வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். டாடா படத்தில் கவினுடன் நடித்த கதாபாத்திரம் அவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். அப்போது அவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. தற்போது பிரதீப் ஆன்டனி திருமண வாழ்க்கை குறித்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.




























