முன்னாள் பாகிஸ்தான் மாநில அமைச்சரான ருக்சார் அகமது, 1990களில் மான்செஸ்டரின் Rusholme பகுதியில் பராமரிப்பு இல்லங்களில் இருந்த குறைந்தது இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் 2024 ஜூலை 18 அன்று Manchester Airport-ல் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு வெளிநாடு செல்ல கட்டுப்பாடு விதிக்க Greater Manchester Police கோரியிருந்தபோதிலும், கடுமையான கட்டுப்பாடுகளை நீதிபதி நிராகரித்ததாக The Guardian தெரிவித்துள்ளது.
பின்னர் பாகிஸ்தானுக்குச் சென்ற அவர், உடல்நிலை காரணமாக விமானப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறி பிரிட்டனில் பொலிஸாரை சந்திக்க வேண்டிய நிகழ்வில் ஆஜராகவில்லை. இதற்கிடையில், பிரதமர் Shehbaz Sharif-ன் Pakistan Muslim League-Nawaz (PML-N) கட்சி சார்பில் அவர் மீண்டும் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது பாகிஸ்தானின் Mirpur மாவட்டத்தில் உள்ள Khari Sharif பகுதியில் இருக்கும் ருக்சார் அகமது, தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற பிரிட்டனுக்கு திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் எப்போது திரும்புவார் என்ற தேதியை தெரிவிக்கவில்லை.
தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுப்பதாகவும், சட்ட ஆலோசனையின் பேரில் இந்த விவகாரம் குறித்து மேலதிகமாக கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் இதுவரை இந்த விவகாரத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படவில்லை.
அடுத்த ஆறு வாரங்களுக்குள் அவர் பொலிஸ் பிணை தொடர்பாக ஆஜராக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆஜராகாத பட்சத்தில் கைது வாரண்ட் பிறப்பிப்பது அல்லது அவரை பிரிட்டனுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து Greater Manchester Police பரிசீலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
































