அந்த படகில் மொத்தம் 36 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் 3 படகு பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். விபத்துக்குப் பின்னர் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோய் ஆகிய இடங்களில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் முழுமையான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் அதிகாரிகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. Vietnam News
ஹொன் மே ரூட் தீவிலிருந்து அன் தோய் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கரையிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாகவும் அதிக அலைகள் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமின் மிகப்பெரிய தீவான பு குவொக், சமீப ஆண்டுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தளமாக மாறியுள்ள நிலையில் இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.































