ஒருகாலத்தில் பாடல் தொடங்கிய சில விநாடிகளிலேயே அது இளையராஜாவின் இசை என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இப்போது 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளைஞர்களும் அவரது புதிய பாடல்களை ரசித்து, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பிற சமூக வலைதளப் பதிவுகளில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இளையராஜா இசையின் தனித்துவத்தை ரசிக்கும் இளைஞர்கள்
‘கல்யாண விருந்து’ பாடலில் கிராமிய உணர்வும் பாரம்பரிய இசையின் சுவையும் இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். ‘முத்துமணி’ பாடலில் ஸ்வேதா மோகனின் குரலுடன் இளையராஜாவின் குரலும் இணைந்துள்ளது. பாடலில் வரும் ‘வாடி மீனாட்சி’ பகுதி சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
இன்றைய இசை போக்குக்கு ஏற்ப தனது தனித்துவத்தை மாற்றாமல், புதிய தலைமுறையையும் கவர்வதே இந்தப் பாடல்களின் பலம் என ரசிகர்கள் கூறுகின்றனர். பாடல் வரிகளுடன் பின்னணியில் ஒலிக்கும் இசைக்கருவிகளையும் தனித்தனியாக ரசிக்க முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கருவி மற்றொரு கருவியுடன் உரையாடுவது போன்ற உணர்வு இருப்பதாகவும் கருத்துகள் பதிவாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு ‘கம்பேக்’ தேவையில்லை என்ற கருத்தும் பரவி வருகிறது. 1970களில் தொடங்கிய அவரது இசைப் பயணம் ஐந்து தசாப்தங்களைத் தாண்டியும் தொடர்கிறது. 2026ஆம் ஆண்டிலும் புதிய தலைமுறையினர் அவரது பாடல்களை ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வடிவில் பகிர்வது, இளையராஜா இசை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், சாய் அபயங்கர் உள்ளிட்ட சமகால இசையமைப்பாளர்களை இளைஞர்கள் கொண்டாடினாலும், இசையை தனி உலகமாக மாற்றிய முன்னோடிகளில் இளையராஜாவுக்கு முக்கிய இடம் இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இளையராஜா இசை குறித்த விவாதம் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.



























