தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16-ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. டித்வா சூறாவளிக்குப் பிறகான மீட்பு, நிவாரணம் மற்றும் இயல்பு நிலை மீளமைப்புக்கான கொள்கை முடிவுகள் இதில் எடுக்கப்பட்டன.


அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறை உருவாக்கம், 2005 ஆம் ஆண்டு இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்ட திருத்தம், தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் குறைக்கும் நடவடிக்கைகள், மத்திய மலைநாட்டின் (Central Fragile Area) பாதுகாப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தரவு தளம் உருவாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வெளிநாட்டு நிவாரண உதவிகளை வெளிப்படைத்தன்மையுடன் ஒருங்கிணைக்க தனிக்குழு அமைப்பதற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் சுத்தம் செய்ய வழங்கப்படும் ரூ.25,000 கொடுப்பனவை இந்த வாரத்திற்குள் முழுமையாக வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
டித்வா சூறாவளியால் நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,164 வீடுகள் முழுமையாகவும் 1,12,110 வீடுகள் பகுதியளவாகவும் சேதமடைந்துள்ளன. தற்போது 796 பராமரிப்பு நிலையங்களில் 72,911 பேர் தங்கியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
2026 இறுதிக்குள் அபாய வலயங்களில் உள்ள மக்களுக்காக 8,000 வீடுகள் நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தின் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.





Leave a Reply