சம்பவம் திங்கட்கிழமை பிற்பகல் 4.24 மணியளவில் மேற்கு 41ஆவது தெரு மற்றும் செவன்த் அவென்யூ அருகே தொடங்கியது. நியூயார்க் காவல் துறை ஆணையர் ஜெசிகா டிஷ், சந்தேகநபர் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த 49 வயதான பமீலா சிஸ்னெரோஸ் என அடையாளம் தெரிவித்தார்.
போலீசாரின் தகவலின்படி, சிஸ்னெரோஸ் முதலில் சுரங்கப்பாதை அருகே இருந்த 68 வயது ஆணின் வயிற்றில் கத்தியால் குத்தினார். பின்னர் வடக்கு நோக்கிச் சென்று 32 வயது பெண்ணின் வயிற்றிலும் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இரு காயமடைந்தவர்களும் பெல்வியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 32 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். அவரது நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
டைம்ஸ் ஸ்கொயர் கத்திக்குத்து: போலீஸ் துப்பாக்கிச்சூடு
தாக்குதல்களுக்குப் பிறகு, இரண்டு கத்திகளுடன் சிஸ்னெரோஸ் வடக்கே உள்ள நியூயார்க் காவல் துறை துணை நிலையத்தை நோக்கிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு போலீசார் அவரை எதிர்கொண்டனர்.
சுமார் நான்கு நிமிடங்கள் போலீசார் அவருடன் பேசினர். ஆயுதங்களை கீழே வைக்கும்படி பலமுறை உத்தரவிட்டனர். ஆனால் அவர் மறுத்ததுடன், அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அவரைத் தடுக்க பல போலீசார் டேசர் கருவிகளைப் பயன்படுத்தினர். அவை பயனளிக்கவில்லை. கத்திகளை கையில் வைத்தபடி சிஸ்னெரோஸ் அதிகாரிகளை நோக்கி முன்னேறிய பின்னர், இரண்டு போலீசார் தங்களது துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிஸ்னெரோஸ் பெல்வியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. டைம்ஸ் ஸ்கொயர் கத்திக்குத்து சம்பவத்திற்கான தெளிவான நோக்கம் இதுவரை தெரியவில்லை.
சிஸ்னெரோஸுக்கு 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நியூயார்க் போலீசாருடன் தொடர்புடைய மனநலச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்கத்தில் இந்தச் சம்பவம் கத்திமுனையில் நடந்த கொள்ளையாகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக போலீசார் கூறினர்.
விசாரணை தொடர்ந்த நிலையில், மேற்கு 42ஆவது தெரு முதல் மேற்கு 47ஆவது தெரு வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.




























