உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இனி அகதிகள் “அவர்களின் சொந்த நாடு பாதுகாப்பானதாக கருதப்படும் நேரத்தில் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கை அடுத்த வாரம் விரிவாக அறிவிக்கப்பட உள்ள குடியேற்றச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். இங்கிலாந்து வந்தடைபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம்.
குடும்ப மறு ஒருங்கிணைப்பு திட்டமும் நிறுத்தம்
அக்டோபர் தொடக்கத்தில் ஏற்கனவே இங்கிலாந்தில் வசிக்கும் அகதிகளின் குடும்பத்தினரை நாட்டில் சேர அனுமதிக்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தையும் அரசு அறிவித்தது.
செப்டம்பர் மாதத்திலேயே இந்த விண்ணப்பங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி ஜூன் 2025-க்கு முந்தைய ஆண்டில் மட்டும் சுமார் 21,000 குடும்ப மறு ஒருங்கிணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கே வழங்கப்பட்டவை.
அதே நேரத்தில் இனி அகதி அந்தஸ்தைப் பெற்றவர்கள் தானாகவே குடும்ப மறு ஒருங்கிணைப்பு உரிமையைப் பெற மாட்டார்கள் என்றும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கருத்து
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது:
“துன்புறுத்தலிலிருந்து தப்பி வரும் உண்மையான அகதிகளை வரவேற்க இங்கிலாந்து தொடர்ந்தும் தனது பங்கை வகிக்கும். ஆனால் இனி இங்கிலாந்தில் குடியேறுவது எளிதல்ல — மக்கள் அதை சம்பாதிக்க வேண்டும்.”
இந்த நடவடிக்கைகள் சமீபத்தில் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்ற எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள UK Party போன்ற தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியையும் சமன் செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
































