சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வெளிநாட்டினர் அமெரிக்காவிலேயே தங்கி கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக தங்கிவிடும் நிலையை குறைப்பதே இதன் நோக்கம் என விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியேற்ற அமைப்பு “மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் திறமையானதாகவும்” மாறும் என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த புதிய கொள்கைக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன. தற்போது கிரீன் கார்டு ஒப்புதலுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான குடியேற்றவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் திட்டங்கள் பாதிக்கப்படலாம் என முன்னாள் குடியேற்ற அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவை விட்டு வெளியேறும் சிலர் மீண்டும் நாடு திரும்புவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என்பதும் கவலைக்குரியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தேசிய நலன் அல்லது பொருளாதார முக்கியத்துவம் கொண்ட சில விண்ணப்பங்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என்றும் ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






























