வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர் நேரில் வந்து நிலைமையை பார்வையிடவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கீழ்த்தரமான பேச்சு – மக்களின் ஆதங்கம்
தமது அவல நிலையை தொலைபேசி மூலம் தெரிவித்த குடும்பப்பெண்ணிடம்,
“சோத்துக்கு வழியில்லாதவர்களுக்கு சாமான் கொடுக்கவில்லை” என கிராம சேவையாளர் இழிவான வார்த்தைகளால் பேசியதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் ஆலோசனையின்படி, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு, உரிய பதிவுகளை மேற்கொண்டு உதவிகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த போதும்,
பல வாரங்களாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும் கிராம சேவையாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
யுத்தத்திற்குப் பின் மீளக்குடியேற்றம் – தொடரும் வெள்ள அபாயம்
தம்பகாமம் KN 86 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இந்த கிராமங்கள் யுத்தத்தின் பின்னர் படிப்படியாக மீளக்குடியேற்றப்பட்டன. காணியற்ற மக்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்ட போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாரி காலங்களில் இந்தப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி வருகிறது.
இதன் காரணமாக, அன்றாட தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் இடுப்பிற்கு மேல் வெள்ளம் நிற்பதால் ஐந்து மாதங்கள் வரை சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
குளம் புனரமைப்புக்கு தடையிடும் கிராம சேவையாளர்?
வெள்ளநீர் முறையாக வழிந்தோடுவதற்காக, அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றை புனரமைப்பதற்கு கிராம அமைப்புகள் ஒன்றிணைந்து, ஏனைய அரச தரப்புகளிடமிருந்து அனுமதி பெற்றிருந்த போதிலும்,
கிராம சேவையாளர் அதற்கு தடையிட்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தீர்வு கோரி மக்களின் கோரிக்கை
எனவே, பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் உடனடி தலையீட்டை மேற்கொண்டு,
வெள்ளப் பிரச்சினைக்கும் கிராம சேவையாளரின் செயல்பாடுகளுக்கும் உரிய தீர்வை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






























