ஆகஸ்ட் 19 முதல் 23-ம் தேதி வரையிலான காலத்தில் இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோரக் காவல் படைகள் நடவடிக்கை மேற்கொண்டன. செனகல் கடற்படை வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 22-ம் தேதி செயிண்ட்-லூயிஸ் கடற்கரைக்கு அப்பால் 210 பேருடன் சென்ற படகு மீட்கப்பட்டது. அவர்களில் சிலர் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுடன் இருந்ததாகவும், 8 பேர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், ஆகஸ்ட் 19, 2026 அன்று செயிண்ட்-லூயிஸ் கடற்கரைக்கு அப்பால் இருந்து 246 பேர் மீட்கப்பட்டனர். இந்த இரு நடவடிக்கைகளிலும் சுமார் 456 பேர் மீட்கப்பட்டதாக செனகல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொரிட்டானியாவில் 315 பேர் மீட்பு
மொரிட்டானியா கடலோரக் காவல் படை வெளியிட்ட தகவலில், காம்பியாவில் இருந்து புறப்பட்ட மரப்படகில் இருந்த 315 பேர் இரவு நேரத்தில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் “கடினமான மனிதாபிமான சூழ்நிலையில்” இருந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் 40 குழந்தைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொருந்தும் சட்ட மற்றும் மனிதாபிமான நடைமுறைகளின்படி தேவையான உதவி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
நீண்டகால மோதல்கள், காலநிலை நிலையற்ற தன்மை மற்றும் பொருளாதார பற்றாக்குறை ஆகியவை அட்லாண்டிக் கடல் வழியாக நடைபெறும் ஒழுங்கற்றப் பயணங்கள் அதிகரிப்பதற்கு காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
வருகை குறைந்தாலும் ஆபத்து அதிகரிப்பு
ஸ்பெயின் உள்துறை அமைச்சகத் தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் 15 வரை கடல் வழியாக 14,411 பேர் ஸ்பெயினை அடைந்துள்ளனர். இது 2025-ம் ஆண்டின் இதே காலத்தைவிட 29 சதவீதம் குறைவு. கேனரி தீவுகளில் 4,808 பேர் பதிவாகியுள்ள நிலையில், அங்கு வருகை 60 சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும், மேற்கு மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகள் நோக்கிய அட்லாண்டிக் பாதை மேலும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஜூலை 9 வரை உயிரிழப்பு விகிதம் 4.5 சதவீதமாக உயர்ந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. காம்பியா போன்ற மேலும் தெற்குப் பகுதிகளில் இருந்து பயணங்கள் தொடங்குவதால், கடலில் இரண்டு வாரங்களுக்கும் மேலான நீண்ட பயணங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் அதிகரிப்பதாக ஐநா இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

































