கவுகாத்தியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி, தனது மனைவி ரியாவைக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். பின்னர் அவரது தலையைத் துண்டித்து பாலிதீன் பையில் வைத்து வீட்டிலிருந்த பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது ரியாவின் உடலும் தலையும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட கோஸ்வாமியிடம் விசாரணை நடத்தியபோது, தனது மனைவி தன்னை ஏமாற்றியதாகவும், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததில் உயிரிழப்பு
கடந்த 8ஆம் தேதி குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கொலை குறித்து வருத்தமோ மன்னிப்பு கோரும் எண்ணமோ இல்லை என்று கோஸ்வாமி செய்தியாளர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்தால், தனது மனைவியின் ‘சுகர் டாடி’ என்று குறிப்பிட்ட நபரையும் கொலை செய்வேன் என்றும் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
கொலை நடந்தபோது கோஸ்வாமி குடிபோதையில் இருந்ததாகவும், வீட்டில் காலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அதிகாலை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரை ஹதிகான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, போலீஸாரைத் தாக்கிவிட்டு நரகசுர் பஹார் அருகே ஓடும் வாகனத்திலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தில் விழுந்த அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த Assam wife murder case தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
































