அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை முறையாக செயற்படுத்தும் வகையில் தரவு கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் கூடிய ‘வழிவகைகள் பற்றிய குழுவில்’ விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

இத்திட்டத்தில் 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களைச் செயற்படுத்துவதற்கான வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது.

அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மட்டுமே பயனாளிகளைப் பதிவுசெய்யத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், இது போதாது எனவும் நாடு முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

இவ்வாறு பதிவுசெய்த பின்னரே, மக்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் குழு குறிப்பிட்டது.

முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது.

தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது உள்ளனர் என்று அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித் திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading