ஐரோப்பா முழுவதும் விரைவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்படும்.

ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதாக சர்வதேச ஆற்றல் அமைப்பு (IEA) எச்சரித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் போரினால் ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை தொடர்ந்தால் ஐரோப்பாவில் உள்ள விமான எரிபொருள் கையிருப்பு சுமார் 6 வாரங்களுக்குள் முழுமையாக தீர்ந்து போகும் அபாயம் உள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்தால் விரைவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும் IEA தலைவர் பாதிஹ் பிய்ரோல் தெரிவித்தார். இந்த எச்சரிக்கை வெளியானதும் ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையம் அவசர திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அங்கு தற்போது சுமார் 12 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையை பூர்த்தி செய்ய ரயில் மூலம் எரிபொருள் கொண்டு வர திட்டமிடப்பட்டாலும் அது வழக்கமான தேவையின் 70% மட்டுமே நிறைவேற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அவசர நிலை உருவானால் முக்கியமான நீண்ட தூர விமான சேவைகள் மற்றும் குடியுரிமை மீட்பு பயணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக இந்த பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. சில நாடுகள் தங்களின் அவசர எரிபொருள் கையிருப்புகளை வெளியிடும் திட்டங்களையும் மாற்று எரிபொருள் ஆதாரங்களை பயன்படுத்தும் முயற்சிகளையும் பரிசீலித்து வருகின்றன. அதே சமயம் தேவையற்ற விமானப் பயணங்களை குறைக்கவும் பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நெருக்கடி நீடித்தால் விமான டிக்கெட் விலைகள் உயர்வு பொருளாதார பாதிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் சிக்கல்கள் போன்ற பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது இந்த பிரச்சினைக்கு முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading