பாராளுமன்ற விதிமுறை 121(5)(i)ன் படி தயாரிக்கப்பட்ட 2026 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு மசோதா குறித்த வரைவு அறிக்கை, பாராளுமன்ற பொது நிதி குழுவில் (COPF) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வறிக்கை, பொதுநிதி குழுவின் தொழில்நுட்ப குழுவினரால் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற (11) ஆம் திகதியிலான கூட்டத்தில் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையின் படி, 2026 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு மசோதா பொது நிதி மேலாண்மைச் சட்டம் (PFM Act), பொது கடன் மேலாண்மைச் சட்டம் (PDM Act) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்ட தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 2025 ஆம் ஆண்டில் வருவாய் எதிர்பார்ப்பை விட ரூ. 100 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்கு வாகன இறக்குமதி வரியில் ஏற்பட்ட அதிக வருமானமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 2026 ஆம் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் எளிதாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. எனினும், 2026 இல் வாகன இறக்குமதி குறைவதால் வருவாய் வளர்ச்சி மந்தமாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2026 நிதியாண்டு ஒதுக்கீட்டு மசோதாவைச் சுற்றி குடிமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில், பட்ஜெட்டின் வெளிப்படைத்தன்மை, பிரிவுகளுக்கிடையிலான நிதி ஒதுக்கீடு, தற்போதைய சவால்கள் மற்றும் தீர்வுக்கான பரிந்துரைகள் குறித்து அவர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
பொது நிதி குழுத் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி. தெரிவித்ததாவது, இக்கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் நிதி அமைச்சுக்கு அனுப்பி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் துணை அமைச்சர்கள் சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்க, அஜித் ஆகலகட, சித்ரால் பெர்னான்டோ, விஜேசிறி பச்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரகோன், லக்மலி ஹேமசந்திர ஆகியோரும் கலந்து கொண்டனர்.





Leave a Reply