நவம்பர் 2025 இல் செனட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வரி மோசடிக்கு எதிரான மசோதா பிப்ரவரி 24 முதல் 27 வரை பிரான்ஸ் தேசிய சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொது நிதிக்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் இழப்பை ஏற்படுத்தும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொழிலாளர் அமைச்சர் ஜீன்-பியர் ஃபரான்டோவின் ஆதரவுடன் இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசு அமைப்புகளுக்கிடையேயான தகவல் பகிர்வை வலுப்படுத்துதல், நவீன புலனாய்வு கருவிகள் மூலம் மோசடியைக் கண்டறிதல் மற்றும் கடுமையான தண்டனைகள் விதித்தல் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும்.
இந்த மசோதாவில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய விதியாக “மோசடிக்கான தீவிர சந்தேகங்கள்” எழும்பினால் விசாரணை முடியும் வரை சமூக உதவித் தொகைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்ற ஏற்பாடு இடம் பெற்றுள்ளது.
மேலும் நன்மை பெறுபவர்களின் வசிப்பிடத்தைச் சரிபார்க்க IP முகவரி போன்ற இணைப்புத் தரவுகளை வரையறுக்கப்பட்ட முறையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பயோமெட்ரிக் அடையாளச் சரிபார்ப்பு குறித்து விவாதம் எழுந்தாலும், கட்டாய முக அங்கீகாரம் அல்லது கைரேகை பயன்படுத்தும் விதிகள் மசோதாவில் சேர்க்கப்படவில்லை.
வலதுசாரிகள் பொது நிதி பாதுகாப்புக்கான நடவடிக்கையாக இதை வரவேற்கும் நிலையில், இடதுசாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தனிநபர் சுதந்திரங்கள் பாதிக்கப்படலாம் என கவலை வெளியிட்டுள்ளன.





Leave a Reply