விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
பொதுமக்கள் பெருமளவில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முயற்சிக்கையில் போதுமான பேருந்துகள் இல்லாததால் பலர் பேருந்து நிலையங்களில் சிக்கி தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை காரணமாக பலர் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் போகும் அபாயம் உள்ளதால் வாக்குப்பதிவை இரவு 8 மணி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து வசதியின்றி காத்திருப்பதாகவும் உடனடி போக்குவரத்து ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து சிக்கல்கள் உள்ள இடங்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அதேபோல் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் நிலவுவதால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுகிறது என்றும், இது வாக்குப்பதிவு சதவிகிதத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கண்காணிப்பை அதிகரித்து வாக்குப்பதிவு செயல்முறையை வேகப்படுத்த வேண்டும் என்றும் தனது கடிதத்தில் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வருவதுடன் முக்கிய அரசியல் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பலரும் காலை முதலே வாக்களித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.





Leave a Reply