சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் தொடர்பான விசாரணை 76 நாட்கள் கடந்தும் முக்கிய முன்னேற்றமின்றி இருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைபேசியின் பாதுகாப்பு பூட்டை (Lock) இன்னும் திறக்க முடியாததால் தடயவியல் பரிசோதனைக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு (CCD) நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த நீதவான் பாசன் அமரசேன “இரண்டு வாரங்களுக்கு முன்பு கூறிய அதே விளக்கமே மீண்டும் வழங்கப்படுகிறது. விசாரணை அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவரையிலான முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை” எனக் கடுமையாக சுட்டிக்காட்டினார்.
மேலும் சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட மருந்துப் பொருட்களின் தடயவியல் ஆய்வு அறிக்கையும் கபில சந்திரசேனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது மரணத்தைச் சூழ்ந்த மர்மம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.













Leave a Reply