பிரான்சில் குடும்ப கொடுப்பனவுகளை கணக்கிடும் விதிகளில் முக்கியமான மாற்றம் 2026 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கான வயது சார்ந்த கூடுதல் தொகை (majoration) வழங்கப்படும் வயதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை, ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு சார்புடைய குழந்தைகள் இருந்தால், இரண்டாவது குழந்தை 14 வயதை அடைந்தவுடன் மாதாந்திர குடும்ப கொடுப்பனவில் கூடுதல் தொகை வழங்கப்பட்டது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மூத்த குழந்தை 14 வயதை அடைந்ததும் இந்த கூடுதல் தொகை வழங்கப்பட்டு, பின்னர் அந்த வயதை எட்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், 2026 மார்ச் 1 முதல், இந்த கூடுதல் தொகைக்கு தகுதியான வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2012 மார்ச் 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தும். அதாவது, உங்கள் குழந்தை 2012 மார்ச் 1க்கு முன் பிறந்திருந்தால், அவர்களின் 14வது பிறந்தநாளுக்குப் பிறகு வரும் மாதத்திலிருந்து வழக்கம்போல் கூடுதல் தொகை வழங்கப்படும்.
ஆனால் குழந்தை 2012 மார்ச் 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருந்தால், அவர்களின் 18வது பிறந்தநாளுக்குப் பிறகு வரும் மாதத்திலிருந்து மட்டுமே இந்த கூடுதல் தொகையை பெற முடியும்.
இதேவேளை, 20 வயதிற்குட்பட்ட குறைந்தது இரண்டு சார்புடைய குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு குடும்ப கொடுப்பனவுகள் தொடர்ந்து வழங்கப்படும். கொடுப்பனவின் தொகை வீட்டு வருமானம், குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வயது ஆகியவற்றைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும்.
மாதாந்திர கூடுதல் தொகை வீட்டு வருமானத்தின் அடிப்படையில் மாறுபடும்; முழு விகிதத்தில் €75.53 வழங்கப்படும். குறைந்த அல்லது நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு ஒரு குழந்தைக்கு €37.77 அல்லது €18.88 வழங்கப்படும்.
மேலும், ஒரு குழந்தை 20 வயதை அடைந்தவுடன், அவர் குடும்ப கொடுப்பனவுகளை கணக்கிடுவதில் சார்புடையவராக கருதப்பட மாட்டார். எனவே, அந்த குழந்தை இனி குடும்ப நலனுக்கான கணக்கில் சேர்க்கப்படமாட்டார். இருப்பினும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், வருமான இழப்பை குறைக்க தற்காலிகமாக ஒரு மொத்த தொகை கொடுப்பனவு வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்த மாற்றம் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆணை எண் 2026-138 அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. குடும்பங்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, குடும்ப நலத் திட்டங்களை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.





Leave a Reply