இந்தாண்டு மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு இந்தியா முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை கடும் அதிர்ச்சிக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர்.

மாணவர்கள் பலர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தூக்கமின்றி சமூக வாழ்க்கையைத் துறந்து, நீண்ட நேரம் கடுமையாக உழைத்து தேர்வுக்கு தயாரானதாக கூறுகின்றனர். “ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம்தான் தூங்குவேன். யாருடனாவது பேசினாலும் அந்த நேரத்தில் படித்திருக்கலாமே என்ற எண்ணமே வரும். இப்போது எல்லாம் பயனற்றதாக தோன்றுகிறது” என்று விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கணபதி சுந்தரவேல் வேதனையுடன் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த லோகேஷ் என்ற மாணவர் கடந்த ஒரு ஆண்டாக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிரமாக தயார் செய்திருந்தார். தினமும் காலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை படிப்பில் முழுமையாக ஈடுபட்டதாகவும், பேருந்தில் பயணம் செய்யும் நேரத்தில்கூட குறிப்புகள் படித்ததாகவும் தெரிவித்தார். “இந்த முறை நிச்சயம் மருத்துவ இடம் கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது. ஆனால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை” என்றார்.

இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சிக்காக சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவழித்ததாக கூறும் கணபதி சுந்தரவேல் மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்னைகளுக்கும் ஆளானதாக தெரிவித்தார். “தேர்வு மையங்களில் மிகவும் கடுமையான சோதனைகள் நடத்துகிறார்கள். சிறிய உலோகப் பொருள்கூட அனுமதிக்க மாட்டார்கள். அப்படியிருக்க வினாத்தாள் எப்படி கசிந்தது?” என்று கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனர் அபிஷேக் சிங் மே 7ஆம் தேதி வாட்ஸ்அப்பில் பரவிய மாதிரி வினாத்தாள் உண்மையான வினாத்தாளுடன் ஒத்திருந்ததாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். மேலும் “22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த விதிமீறலையும் அனுமதிக்க முடியாது” என்றும் கூறினார்.

இதனிடையே கல்வியாளர் நெடுஞ்செழியன் நீட் தேர்வை மாநில அரசுகளே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “இது மாணவர்களின் தவறு அல்ல நிர்வாக தோல்வி. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது சர்ச்சை உருவாகிறது. தேசிய அளவிலான ஒரே அமைப்பின் கீழ் நடத்தப்படுவதால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பல மாணவர்களின் மருத்துவக் கனவுகளையும் மனநிலையையும் தீவிரமாக பாதித்துள்ளது. மறுதேர்வு எப்போது நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மாணவர்கள் மீண்டும் தயாராக வேண்டிய கட்டாயத்தில் குழப்பத்துடனும் பயத்துடனும் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading