ரஷ்யாவை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் உக்ரைன் ட்ரோன்கள் தவறுதலாக லாட்வியா வான்வெளிக்குள் நுழைந்து எண்ணெய் சேமிப்பு நிலையம் அருகே வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து எவிகா சிலினா தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த விவகாரம் லாட்வியாவில் கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் ஆளும் கூட்டணி அரசும் பெரும்பான்மையை இழந்துள்ளது.
லாட்வியாவின் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்களை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அன்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சியான “ப்ரோகிரசிவ்ஸ்” ஆதரவை வாபஸ் பெற்றதால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து பிரதமர் சிலினா தனது பதவி விலகலை அறிவித்தார்.
மே 7ஆம் தேதி ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள லாட்வியாவின் ரேசெக்னே பகுதியில் இரண்டு ட்ரோன்கள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் வெடித்து சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த ட்ரோன்கள் ரஷ்ய மின்னணு தடங்கல் நடவடிக்கைகளால் பாதை மாறியிருக்கலாம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் நேட்டோ உறுப்புநாடுகளின் வான்வழி பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. லாட்வியா, லித்துவேனியா உள்ளிட்ட பால்டிக் நாடுகள் எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நேட்டோவிடம் உதவி கோரியுள்ளன. இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி, பால்டிக் நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்த நிபுணர்களை அனுப்பத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.





Leave a Reply