உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட சமீபத்திய மதிப்பீட்டின்படி உலகளவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தற்போது மின்புகையிலை (E-Cigarettes) பயன்படுத்தி வருகின்றனர். இதே நேரத்தில் 2024-ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் மக்கள் இன்னும் பாரம்பரிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
HO ஜெனீவா அலுவலகம் வெளியிட்ட இந்த அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளில் புகையிலைப் பயன்பாடு குறைந்திருந்தாலும், மின்புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிவேகமாக அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொருட்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படுவதாக WHO எச்சரித்துள்ளது.
WHO அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“மின்புகையிலைப் பொருட்கள் பாதுகாப்பானவை என்ற தவறான நம்பிக்கையை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் நீண்டகால சுகாதார விளைவுகள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. அரசுகள் இதற்கு விரைவாகவும் வலுவாகவும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.”
புகையிலை மற்றும் மின்புகையிலைப் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் WHO பல நாடுகளுக்கு கடுமையான கொள்கைகள் மற்றும் பொது விழிப்புணர்வு திட்டங்களை பரிந்துரைத்துள்ளது. 2025-க்குள் புகையிலைப் பயன்பாட்டை 30% குறைக்கும் உலகளாவிய இலக்கை அடைவது இன்னும் சவாலாகவே உள்ளது என்று அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply