டிட்வா சூறாவளியால் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தையடுத்து, மனநல பராமரிப்பை முன்னுரிமைப்படுத்துவதற்கான அறிவுரைகளுடன் இலங்கை மனநல நிபுணர் கல்லூரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூறாவளிக்குப் பின் மக்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி பாதிப்புகளை சமாளிக்கவும், குடும்பங்களும் தனிநபர்களும் மனநலத்தை மீட்டுக்கொள்ளவும் உதவும் வழிகாட்டுதல்களையும் கல்லூரி அறிக்கையில் வழங்கியுள்ளது.
“இத்தகைய பேரிடர் நிலைமைகளுக்குப் பின்னர் மன அழுத்தம், துக்கம், கோபம், பயம், குழப்பம் போன்ற உணர்வுகள் ஏற்படுவது சாதாரணமே. மனநலத்தை முன்னுரிமைப்படுத்துவது மீண்டெழுதலின் முக்கிய அங்கமாகும்,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனநல நிபுணர் கல்லூரி வழங்கிய முக்கிய பரிந்துரைகள்:
- சிறிய பணிகளில் கவனம் செலுத்துங்கள்: வீட்டு சுத்தம், ஆவணங்களை சரி பார்க்குதல், உறவினர்களைத் தொடர்பு கொள்ளுதல், அயல்வாசிகளைப் பார்வையிடுதல், தன்னார்வ சேவையில் ஈடுபடுதல் போன்றவை கட்டுப்பாட்டு உணர்வை மீட்டெடுக்க உதவும்.
- பாதுகாப்பற்றோரைக் கவனியுங்கள்: கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுடன் உள்ள தாய்மார்கள், தனித்து வசிக்கும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சமூக நலத்திட்ட பயனாளர்கள், நீண்டகால நோயாளிகள், மனநல சவால்கள் உள்ளவர்கள் ஆகியோரைக் கவனிப்பது அவசியம்.
- குழந்தைகளுக்கு நம்பிக்கையளிக்கவும்: வழக்கமான அன்றாட நடவடிக்கைகளை தொடருங்கள். எளிய விளக்கங்களைக் கொடுத்து, பெரியவர்கள் பாதுகாப்புக்காக முயற்சி செய்கிறார்கள் என்று உறுதியளிக்கவும்.
- ஆன்மீக மற்றும் கலாசார நடைமுறைகள் பயனுள்ளதாகும்: பிரார்த்தனை, தியானம், கலாசார வழிபாடுகள், சமூகக் கூட்டங்கள் ஆகியவை நன்மை அளிக்கலாம். அவை பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும்.
- வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகளைத் தொடருங்கள்: தேவையானவர்கள் அருகிலுள்ள வைத்திய அதிகாரிகளிடம் உதவியைப் பெறலாம்.
- மிகுதியான செய்திகளைத் தவிர்க்கவும்: பேரிடர் செய்திகள் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்கவும். அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே பின்பற்றுங்கள்.
- வதந்திகளைப் பரப்பாதீர்கள்: சரிபார்க்கப்படாத தகவல்கள், தனிப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய தகவல்கள், அதிர்ச்சிகரமான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம்.
- மது மற்றும் போதைப்பொருள்களைத் தவிர்க்கவும்: மன அழுத்தத்தை சமாளிக்க இவற்றை பயன்படுத்தாதீர்கள். இது எதிர்காலத்தில் மேலும் பிரச்சினைகளைக் ஏற்படுத்தும்.
- பேரிடர் சூழ்நிலையைத் தவறாக பயன்படுத்தாதீர்கள்.
அறிக்கையின் இறுதியில் மனநல ஆதரவு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது:
“இந்த நேரத்தில் தூக்கம் குன்றுதல், அதிக அச்சம், கவலைநிலை போன்றவை சிலருக்கு தோன்றலாம். தயங்காமல் உதவியை நாடுங்கள். உதவி கேட்பது பலவீனம் அல்ல, அது ஒரு பலம். 1926 என்ற தேசிய மனநல உதவி ஹாட்லைன் 24/7 செயலில் உள்ளது.”
டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய இந்த சவாலான காலத்தை கடந்து செல்ல, மனநலம், சமூக ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவு முக்கியம் என இலங்கை மனநல நிபுணர் கல்லூரி அழைப்பு விடுத்துள்ளது.





Leave a Reply