ஜெர்மனி நாடுகடத்தல், ஜெர்மனியின் மியூனிக் சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக பிரத்யேக நாடுகடத்தல் முனையம் (Deportation Terminal) ஒன்றை அமைக்க விமான நிலைய மேற்பார்வை சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மனித உரிமை அமைப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தரப்புகளின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்படுகிறது.
இந்த புதிய கட்டிடம் ஜெர்மன் கூட்டாட்சி பொலிஸாரின் (Federal Police) பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகம் கட்டிடத்தை நிர்மாணித்து பின்னர் கூட்டாட்சி அரசுக்கு குத்தகைக்கு வழங்கும் என்றும் நாடுகடத்தல் நடவடிக்கைகளில் தாங்கள் நேரடியாக ஈடுபடமாட்டோம் என்றும் விளக்கியுள்ளது.
உள்துறை அமைச்சக ஆவணங்களின்படி, இந்த முனையத்தின் மூலம் ஒரு நாளுக்கு 100 பேர் வரை வழக்கமான வர்த்தக விமானங்கள் மூலம் நாடுகடத்தப்பட முடியும். தேவையெனில் நாளொன்றுக்கு இரண்டு சார்டர் (Charter) நாடுகடத்தல் விமானங்களையும் இயக்கும் திறன் இந்த வசதிக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக அகதி ஆதரவு அமைப்புகள் குடிமக்கள் அமைப்புகள் மற்றும் Verdi தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மியூனிக் நகரின் புதிய மேயர் டொமினிக் கிராவுஸும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளதுடன் பெருமளவிலான நாடுகடத்தல்கள் மியூனிக் விமான நிலையத்தின் வணிக மாதிரியின் ஒரு பகுதியாக இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மியூனிக் விமான நிலையத்தின் உரிமையில் பவேரியா மாநிலம் (51%), ஜெர்மன் கூட்டாட்சி அரசு (26%) மியூனிக் நகரம் (23%) ஆகியவை பங்குதாரர்களாக உள்ளதால் மாநில அரசும் கூட்டாட்சி அரசும் இணைந்து பெரும்பான்மை வாக்குகளால் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.













Leave a Reply