தற்காலிக வசதிக்காக வாங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் குடிநீர் போத்தல், சுற்றுச்சூழலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கக்கூடும் என அமைச்சு வெளியிட்டுள்ள பொது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது. இதனால் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் வெளியே செல்லும்போது தங்களுடன் மீள்பயன்படுத்தக்கூடிய குடிநீர் போத்தல்களை எடுத்துச் செல்லுமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்ணாடிப் போத்தல்கள் உள்ளிட்ட பொருத்தமான மாற்றுகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் புதிய நடவடிக்கைகள்
அரச நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களின் கொள்முதல் மற்றும் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சின் தலையீட்டுடன் வெளியிடப்பட்ட சிறப்பு சுற்றறிக்கை, 2026 மே 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரச நிறுவனங்கள் இத்தகைய போத்தல்களின் கொள்முதல் மற்றும் பயன்பாட்டை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செய்யப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைவாக, அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்கும் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிநபர் பழக்கங்களில் மாற்றம் அவசியம்
திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், தொழிற்துறைகளுடன் இணைந்து நாடளாவிய பிளாஸ்டிக் குறைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
எனினும், விதிமுறைகள் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க போதுமானதாக இருக்காது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. “உண்மையான மாற்றம் எமது அன்றாட பழக்கங்களை மாற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது சொந்த மீள்பயன்பாட்டு குடிநீர் போத்தலை எடுத்துச் செல்வதிலிருந்து மாற்றத்தைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான சார்பைக் குறைப்பது, எதிர்கால தலைமுறைகளுக்காக தூய்மையானதும் பசுமையானதுமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு அவசியம் என அமைச்சு தெரிவித்துள்ளது.






























