உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்குத் தனது நத்தார் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இலங்கையர்கள் அனைவரும் மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பின்னர் உறுதியுடன் மீண்டெழும் ஒரு காலகட்டத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் என்பவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு இவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனைகளின்படி, இக்கட்டான காலங்களில் அயலாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் இந்நாட்டு மக்கள் கடந்த அனர்த்தத்தின் போது மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் உண்மையான அர்த்தத்தை மக்கள் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத பாதைகளிலும் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை சுமந்து சென்றதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெத்லகேமில் ஒரு ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து, உறுதி, நம்பிக்கை மற்றும் ஞானத்துடன் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என கிறிஸ்தவம் போதிப்பதாகவும் அவர் நினைவூட்டினார்.

யதார்த்தத்தின் வேதனையான உண்மைகளை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading