இங்கிலாந்தில் அகதி விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றன
இங்கிலாந்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் அகதி விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிக அளவில் நிராகரிக்கப்படுவதால் அவர்கள் மீண்டும் தாலிபான் அடக்குமுறைக்கு ஆளாகும் அபாயம் உருவாகியுள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
Amnesty International UK மற்றும் Gender Action for Peace and Security (GAPS) வெளியிட்ட அறிக்கையின் படி ஆப்கான் அகதி விண்ணப்பங்களின் அங்கீகார விகிதம் முன்பு 96% ஆக இருந்த நிலையில் தற்போது 34% ஆக குறைந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தது 370 ஆப்கான் பெண்கள் மற்றும் சிறுமிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபான் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு கல்வி, வேலை, சுதந்திரமான பயணம் மற்றும் பொது வாழ்க்கையில் பங்கேற்பது போன்ற அடிப்படை உரிமைகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு தேடி இங்கிலாந்துக்கு வரும் பெண்கள் கூட மறுக்கப்படுவது மனிதாபிமான ரீதியாக கவலைக்குரியது என அமைப்புகள் கூறுகின்றன.
தற்போதைய அகதி கொள்கைகள் பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக மக்களைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பெண்கள் நீண்டகால சட்ட அநிச்சயத்திலும் பாதுகாப்பற்ற நிலையிலும் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.





Leave a Reply