இந்த மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 100 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய நாள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பதற்றம் மறுநாள் காலை உணவு விநியோகம் மற்றும் உறவினர்கள் சந்திப்பு ஏற்பாடுகளின் போது மீண்டும் வெடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிறைக்குள் நுழைந்த சில அதிகாரிகள் தாக்கப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் மற்றும் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. விளையாட்டு உபகரணங்களில் இருந்த இரும்புக் குழாய்களை ஆயுதங்களாகப் பயன்படுத்திய கைதிகள் மேலும் பல அதிகாரிகளை பணயக்கைதிகளாகப் பிடித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சிறையின் தலைமை அலுவலகம் மருந்தகம் மற்றும் ஆயுதக் கிடங்கை கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆயுதங்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருந்ததால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை சிறப்பு அதிரடிப்படை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டதுடன் சுமார் 500 காவல்துறை அதிகாரிகளும் 200 சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிறையை முற்றுகையிட்ட பாதுகாப்புப் படையினர்மீது கைதிகள் செங்கற்கள் இரும்புக் குழாய்கள் மற்றும் கைப்பற்றிய துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியதாகவும் பின்னர் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
































