இதன்போது தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய அவர் பாலச்சந்திரன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவல்கள் பல ஆண்டுகளாக விவாதத்திற்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டார். பயங்கரவாத அமைப்புத் தலைவரின் மகனாக இருந்தாலும் ஒரு சிறுவனுக்கு இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது என வலியுறுத்திய அவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோதும் அவரது மகன் பாதுகாக்கப்பட்டதாகவும் சஹ்ரான் ஹாசிம் உயிரிழந்த பின்னரும் அவரது மகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஏன் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பிய அவர் போரின் போது சிறுவன் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் அது ஒரு யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு சட்டரீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர்வது நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
































