நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 2025 டிசம்பர் 05 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் சுற்றறிக்கை 08/2025 மூலம், சமீபத்திய கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நாடளாவிய ரீதியில் உருவான அவசர நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025 நவம்பர் 28 ஆம் தேதியிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு (2464/30) மூலம் பொது அவசர நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களின் வாழ்க்கையை விரைவாக மீள அமைக்க இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
அமைச்சு செயலாளர், மாகாண சபை செயலாளர்கள், துறைத்தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்த நிவாரண உதவித் திட்டங்கள்
1. வீடு சுத்தம் செய்து மீண்டும் குடியேறுவதற்கான ஒருமுறை நிதி உதவி
- ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 25,000
- வீட்டின் உரிமை இருப்பது/இல்லாதது பொருட்படுத்தாமல் வழங்கப்படும்.
2. சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான உதவி
- ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 50,000
- பேரழிவால் சேதமான வீடுகளில் மீண்டும் குடியேறுவதற்கு உதவியாக.
3. வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு 3 மாத மாதாந்திர உதவி (டிசம்பர் 2025 – பிப்ரவரி 2026)
- குடும்பத்தில் 2 பேர் அல்லது அதற்கு குறைவானவர்கள்: ரூ. 25,000
- 2 பேருக்கு மேற்பட்ட குடும்பங்கள்: ரூ. 50,000
- வீடுகள் முழுமையாக சேதமடைந்த அல்லது நிலச்சரிவு/வெள்ளத்தால் வீடு இழந்த குடும்பங்களுக்கு.
4. வீடு இழந்த குடும்பங்களுக்கு மாதாந்திர வாடகை உதவி
- மாதம் ரூ. 25,000 வரை
- அதிகபட்சம் 6 மாதங்கள்
- புதிய வீடு கட்டப்படும் வரை வீடு இல்லாத குடும்பங்களுக்கு.
இந்த அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் உடனடியாக அமலுக்கு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் இந்த நிதி உதவிகளை பெறலாம்.





Leave a Reply