ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2025 டிசம்பர் 18 அன்று நடைபெற்ற தேர்தலில் ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பார்ஹாம் சாலிஹை புதிய ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகர் (UN High Commissioner for Refugees) ஆகத் தேர்வு செய்துள்ளது. அவர் 2026 ஜனவரி 1 முதல் பதவியேற்க உள்ளார்.
இந்தத் தேர்வைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன்” என பார்ஹாம் சாலிஹ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற கடும் போட்டி நிறைந்த தேர்வு செயல்முறையில் பல நாடுகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பங்கேற்ற நிலையில், பார்ஹாம் சாலிஹ் தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவியேற்ற பின் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தலைமையகமாகக் கொண்டு பணியாற்ற உள்ளார்.
மேலும் அவர், “நானே ஒரு முன்னாள் அகதியாக இருந்தவன். பாதுகாப்பும் வாய்ப்பும் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை நேரடியாக அனுபவித்துள்ளேன். அந்த அனுபவம், கருணை, நடைமுறை சிந்தனை மற்றும் சர்வதேச சட்டத்திற்கான உறுதியான பற்றுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது தலைமைத்துவ அணுகுமுறைக்கு வழிகாட்டும்” என்று கூறினார்.
“அகதிகள் மற்றும் தங்களது இல்லங்களை விட்டு தப்பிச் செல்ல வேண்டியவர்களின் உரிமைகளையும் மரியாதையையும் பாதுகாப்பதே எனது முதன்மை பொறுப்பு இடம்பெயர்வு நிரந்தரமான விதியாக இல்லாமல், தற்காலிக நிலையாகவே இருப்பதற்கான நீடித்த தீர்வுகளை முன்னேற்றுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்.










Leave a Reply