கொழும்பு: 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர் தர)ப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையானது, 2025 நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை முழுமையாக நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ், இந்தத் தடைக் காலத்தில் பின்வரும் செயற்பாடுகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன
பரீட்சார்த்திகளுக்காக தனியார் வகுப்புகளை ஏற்பாடு செய்தல் அல்லது நடத்துதல்.
பரீட்சை தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்குகள், அல்லது செயலமர்வுகள் நடத்துதல்.
பரீட்சை மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் அல்லது விநியோகித்தல்.சுவரொட்டிகள், பதாகைகள், அல்லது இலத்திரனியல்/அச்சு ஊடகங்கள் மூலம் பரீட்சை தொடர்பான பிரசித்தப்படுத்தல்களைச் செய்தல்.
இந்த அறிவுறுத்தல்களை மீறும் எவரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள் என திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது.
இவ்வாறான தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் எங்கேனும் இடம்பெற்றால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் அவசரத் தொடர்புப் பிரிவிற்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் வழங்கவேண்டிய அவசர இலக்கங்கள்
பொலிஸ் நிலையம்: 119
பொலிஸ் அவசர அழைப்பு: 0112421111
பரீட்சைத் திணைக்களம் (நேரடி அழைப்பு): 1911
பரீட்சைகள் ஒழுங்கமைப்புப் பிரிவு: 0112784208 / 0112784537





Leave a Reply