2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நடைபெறும் என தேசிய பரீட்சைகள் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தின் வழிகாட்டலின்படி உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக கற்பிக்க 300 நாட்கள் தேவைப்படுகின்ற நிலையில் இம்முறை மாணவர்களுக்கு 343 பாடசாலை நாட்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் கடந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்கும் அதிகமான கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பரீட்சை கால அட்டவணையில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும் மாணவர்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்புவதைத் தவிர்க்குமாறும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.







Leave a Reply