முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 26ஆம் திகதி அநுராதபுர நீதிவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பவம் தொடர்பான முதலாவது மரபணு (DNA) பரிசோதனை அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம். அநுர குணவர்தன நீதிமன்றத்தில் அறிவித்தார்.
மேலும் இரண்டாவது மரபணு பரிசோதனை அறிக்கையும் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. வழக்கில் முதன்முறையாக சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி கேஷானி விஜேசிங்க பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்களம் நேரடி மேற்பார்வையுடன் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி இனோகா ரணசிங்க, முதலாவது மரபணு பரிசோதனை அறிக்கையின் பிரதியை தமது அதிகார சபைக்கு வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதிவான் உரிய கட்டணத்திற்கு உட்பட்டு அறிக்கையின் பிரதியை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணை அறிக்கைகள் அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.










Leave a Reply