வடக்கு மாகாணத்தில் தூர்வாரப்பட வேண்டிய குளங்களை அடையாளம் கண்டு அவற்றின் புனரமைப்பு மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் வழுக்கையாற்றுப் பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாரி அந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் திட்டத்தின் சாதகமான விளைவுகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தூர்வாரப்பட வேண்டிய குளங்களை அடையாளம் கண்டு தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற நடவடிக்கை எடுக்க முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தலைமையில் நீர்ப்பாசனத் திணைக்களம் கமநல சேவைகள் திணைக்களம் பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடலை நடத்தி திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட சில குளங்களின் தூர்வாரும் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்காக நிலஅளவைத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது





Leave a Reply